.

Thursday, 5 December 2013

இறுதி - 2013 தை-கார்த்திகைவரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை







ஒரு குவளை தேனீரும்

சில உரொட்டிகளுமாய்

மம்மலான அந்தமுன்னிருட்டில்

என் வார்த்தைகளையும்

புன்னகையையும் முழுதாய் உறிஞ்சி

நான் மீண்டும் வருவேனா தெரியவில்லையென

நீ கூறிச்சென்றாய்.





நுாற்றாண்டு நுாற்றாண்டு

இந்த இறுதி வார்த்தைகளோடு

இருந்து போய்விட்டாய்.

இறுதியாய் களி மண்ணில் எழுப்பிய

தாழ்வாரத்திண்ணையில்

என் அருகில் நீ இருந்துபோனாய் சிநேகிதனே!






பிறகொருநாள்

மாந்தைக்காடுகளில்

நம் சீருடை தரித்தபடி கிடந்த உன் சடலத்தை

இணையமொன்றில் பார்க்கநேர்ந்தது.

இன்னுமேன்

இந்த உலகில் இறுதிச்சந்திப்பும்

இறுதி வார்த்தைகளும்....






(2013தை-கார்த்திகைவரை சிறையில் இருந்தபோது எழுதப்பட்ட கவிதை)

-பொன்.காந்தன்-  

No comments:

Post a Comment

Ş